தமிழ்நாட்டில் பட்டுத் தொழில்

தமிழ்நாடு பாரம்பரியமாக பட்டுத்தொழில் மேற்கொண்டு வரும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு பெரும்பாலான விவசாயிகள் பரவலாக மல்பெரி சாகுபடி செய்து வருகின்றனர். 57,472 ஏக்கர் பரப்பளவில் 29,172 விவசாயிகளால் மல்பெரி பயிர் சாகுபடி செய்யப்பட்டு பட்டுப்புழுவளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.

2018–19 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் 2,100 மெட்ரிக் டன் கச்சாப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு தேசிய அளவில் நான்காம் இடமும், இறக்குமதி செய்யப்படும் வெண்பட்டுக்கு மாற்றாக 1,950 மெட்ரிக் டன் வெண்பட்டு உற்பத்தி செய்து, மல்பெரி வெண்பட்டு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. நடப்பாண்டில் 2,200 மெட்ரிக் டன் கச்சாப்பட்டு உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் இறக்குமதிக்கு மாற்றான வெண்பட்டு நூல் உற்பத்தி 2,050 மெட்ரிக் டன் ஆகும். மாநிலத்தின் மொத்த கச்சாப்பட்டு தேவை 3,000 மெட்ரிக் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளதால் கச்சாப்பட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தின் பட்டு நூற்பு செயல்பாடுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் அறியப்பட்டு, புதிய பட்டு நூற்பு தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது, மேம்படுத்தப்பட்ட பட்டு நூற்பு இயந்திரங்கள் கொண்ட 25 பலமுனை பட்டு நூற்பு அலகுகளும், இறக்குமதி செய்யப்பட்ட நவீன பட்டு நூற்பு இயந்திரங்களை கொண்ட 4 தானியங்கி பட்டுநூற்பு அலகுகளும் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவடையும் போது மாநிலத்தின் பட்டு நூற்பு உற்பத்தித்திறன் தற்போதுள்ள 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்கும்.

மேலும், தமிழகம் பட்டு நூற்பு உப பொருட்களை பல்வகைகளில் திறம்பட பயன்படுத்தி இலாபம் ஈட்டும் வகையில் நிரந்தரமான சந்தை வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டின் தேவையை உணர்ந்து தமிழ்நாட்டில் ‘ஈரி பட்டு வளர்ப்பு’ (ஈரி பட்டுப்புழுக்களுக்கு ஆமணக்கு/ மரவள்ளி இலைகளை உணவளித்து ஈரி பட்டுநூல் உற்பத்தி செய்வது) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மல்பெரி சாராத பட்டுவளர்ப்பு வகை ஆகும். [வன்யா (வனம்): காடு] உள்நாட்டின் பூர்வ குடிமக்களால் மலைப்பாங்கான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கணிசமான வேலை வாய்ப்பினை உருவாக்குகிறது. ஆமணக்கு மற்றும் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், விதை மற்றும் கிழங்கின் உற்பத்தி அளவு மற்றும் தரம் பாதிக்காமல், அப்பயிர்களின் 20 சதவீத இலைகளை மட்டுமே பயன்படுத்தி ஈரி பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்வதால் கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர். பட்டு சந்தையில் ஈரி பட்டுக்கு நல்ல தேவை உள்ளது.


பட்டுவளர்ச்சித் துறை


தமிழ்நாடு அரசு 1979 ஆம் ஆண்டில் தொழில் மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த பட்டுவளர்ச்சிப் பிரிவினை ‘பட்டுவளர்ச்சித் துறை’ என்ற தனித்துறையாக சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வகையில் மேம்படுத்தியது. பட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைதல்; தமிழ்நாட்டை வெண்பட்டு மாநிலமாக உருவாக்குதல்; தற்போதைய புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பட்டுவளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரது பொருளாதார நிலை முன்னேற உதவுதல்; கிராமப்புற/ சிறுநகர பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியன பட்டுவளர்ச்சித் துறையின் குறிக்கோள்களாகும். தமிழ்நாட்டில் பட்டுத்தொழில் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து பட்டுவளர்ச்சித் துறை இயக்ககம் செயல்படுத்தி வருகிறது.

மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்களது ஆற்றல்மிக்க வழிகாட்டுதலின்படி கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை, சென்னை கட்டுப்பாட்டின்கீழ் பட்டுவளர்ச்சித் துறை இயங்கி வருகிறது.